Friday, November 25, 2016

பிரசவத்திற்குப்பின்

குழந்தை பராமரிப்பு என்பது தாயின் நலத்தையும் உள்ளடக்கியது. குழந்தை வயிற்றில் இருக்கும்போது உடல்நலத்தை பேணும் தாய்மார்களில் பலர் மகப்பேற்றிற்குப் பிறகு தன்னை சரியாக கவனித்துக்கொள்வதில்லை. இது முற்றிலும் புதியவர்களுக்கான பதிவு. ஆகவே முடிந்தவரை சிறு தகவல்களையும் சேர்த்துள்ளேன்.

குழந்தை பிறந்த அன்று காலையில் தாய்க்கு 2 வெற்றிலையில் அரை சிட்டிகை கஸ்தூரியை வைத்து மைய அரைத்துக் குடுக்கவேண்டும்.  கஸ்தூரி என்பது ஆண் கஸ்தூரி மானின் preputial gland இருந்து கிடைக்குமொரு சுரப்பு. இப்போதெல்லாம் தரமான கஸ்தூரி எந்த கடையிலும் கிடைப்பதில்லை. எனக்கு மதுரையில் ஒரு பிரபலநகைக்கடை குடும்பத்தினர் கொடுத்தனர். சொல்லிவைத்து வாங்கிக்கொள்ளுங்கள். கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை.
2ம் நாள் மஞ்சள், வேப்பிலை,கருப்பட்டியை அரைத்து 3 அரை நெல்லிக்காய் அளவு கொடுங்கள்
3ம் நாள் சதக்குப்பை கஷாயம்
4ம் நாள் வெற்றிலை, அரிசி திப்பிலி
5ம் நாள் தேவையில்லை
6ம் நாள் இஞ்சி கஷாயம்
7ம் நாள் சித்தரத்தை கஷாயம் கொடுக்கவேண்டும்.

இவையெல்லாம் புண்ணாக இருக்கும் வயிற்றிற்கு பலம் தந்து ஜன்னி ஏதும் வராமல் தடுக்கக்கூடியது. வேனில் காலத்தில் பிள்ளை பெற்ற சில பெண்கள் இதமாக இருக்குமென பச்சை தண்ணீரில் குளித்துவிடுவார்கள். இது முற்றிலும் தவறு. பிள்ளை பெற்ற உடம்பிற்கு கண்டிப்பாக சூடு தேவை. உடல்சூட்டிற்கு அதிகமாக நீர் குடிக்க வேண்டும்.

இப்போதெல்லாம் அலோபதி  மருத்துவத்தில் டாக்டர்கள் லேகியம், பிள்ளை மருந்து வேண்டாம் என சொல்கின்றனர். ஆனால் பாட்டி வைத்தியத்தை மீறிய மருந்தில்லை என்பது என் கண்கூடான அனுபவம். குழந்தைக்கு ஒரு மாதம்வரை உரைமருந்தோ அல்லது வேறு அலோபதி மருந்துகளோ குடுக்க முடியாது.ஆகவே இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் தாய்ப்பால் ஜீரணத்தை அதிகரித்து அளவையும் கூட்டி வயிற்றில் உள்ள கசடுகளை நீக்கும்.

தாய்க்கான பிரசவ லேகிய செய்முறை கீழே.

விரலி மஞ்சள் 1
சுக்கு 50 கிராம்
சித்தரத்தை 100 கிராம்
கண்டதிப்பிலி 50 கிராம்
ஓமம் 100 கிராம்
வாயுவிளங்கம் 25 கிராம்
அதிமதுரம் 1
ஆனைகொம்பம் 1 கிராம்
அதிவிடயம் 1
சாதிக்காய் 2
மாசக்காய் 2
சாதிபத்திரி 5 ரூபாய்க்கு
அரிசித்திப்பிலி 50 கிராம்
காசாணியம் 25 கிராம்
சதகுப்பை 50 கிராம்
வால்மிளகு 50 கிராம்

மேற்கண்ட பொருட்களை நன்றாக வறுத்து மிக்ஸியில் அரைத்து நன்றாக சலித்துக்கொண்டு  இதனுடன் நைசாக பொடித்த கருப்பட்டி, தேன், நல்லெண்ணெய், நெய் தலா 100 சேர்த்து அல்வா பதத்தில் உருட்டிக்கொள்ளலாம். ருசியாகவும் இருக்கும். இதை காலை மாலை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு உட்க்கொள்ளலாம். செய்ய முடியாதவர்கள் கடையில் கிடைப்பதையும் உபயோகிக்கலாம். மதுரையெனில் தேர்முட்டியில் இந்த பொருட்களெல்லாம் கிடைக்கும்.

சீரகம் மிளகு அதிகம் சேர்த்த சுண்டவற்றல் குழம்பு, வெந்தயக்குழம்பு, கடலைதுவையல், இட்லி நல்லெண்ணெய், கருப்பட்டி காபி,அசைவம் நிறைய சேர்த்துக்கொள்ளலாம். என் அனுபவத்தில் ஆட்டுக்கால் சூப் சாப்பிட்டால் பால் அதிகம் ஊறுகிறது. குழந்தைக்கு தலை நிற்பதற்காக தலைக்கறி சாப்பிடலாம். ஆட்டுத்தலை என்றில்லை மீன், கோழி எதன் தலையானாலும். கண்டிப்பாக நிறைய நீர் பருக வேண்டும். இது பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை 90% குறைக்கும். பால் குடுக்கும் தாய்மார்களுக்கென கிடைக்கும்  உள்ளாடை அணியலாம். இதன் மூலம் பால் ஊறுவதை உணரலாம் தவிர மார்பகங்கள் தொய்வடைவதிலிருந்து காக்கும். முதுகுவலி உடையவர்கள் சத்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

முதல் ஒரு மாதத்திற்கு குளிக்கும் போணியைக்கூட தூக்க கூடாதென வீட்டில் சொல்வார்கள். தாமரையின் வரிகளில் வருவதுபோல தன்னையே பிழிந்துதானே ஒரு உயிரை வெளியே எடுக்கிறீர்கள். உங்கள் உடலும் பிறந்த ஒரு சிசுவிற்கு ஒப்பானதுதான். ஆகவே உங்களையும் கவனித்துக் கொண்டு பிள்ளையையும் கவனிக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும்விட குழந்தைக்கு பால் கொடுக்கும்போது உங்கள் அழுகை, கோபம் எல்லாவற்றையும் தள்ளிவையுங்கள். ஏனென்றால் உங்கள் சோகம் உங்கள் குழந்தையையும் பாதிக்கும். ஆகவே சந்தோஷமாக குழந்தையை கொஞ்சிக்கொண்டே பால் கொடுங்கள்.

குழந்தை பால் குடிக்கவில்லையென்றால், உரம் விழுந்தால் என்ன செய்வது, இரவில் அழுதுகொண்டே இருந்தால் என்ன செய்வது போன்ற சேய்நல விபரங்கள் அடுத்த பதிவில்.......... 

Saturday, November 20, 2010

சம்பள நாள்

உட்கார்ந்திருந்த பெண்மணி நிறுத்தத்தில் இறங்கி நான் அவள் இருக்கையில் உட்கார்ந்தபோது பேருந்தில் கூட்டம் இருந்தாலும் அவ்வளவு நெரிசல் இல்லை. அருகில் நின்ற பெண் பையை தரும்போது அவள் பார்த்த பார்வையில் ஒரு துவேஷம் இருந்தது. ஏனோ நிற்கின்றவர்களுக்கு உட்கார்ந்திருப்பவர்களுடனும், உட்கார்ந்திருப்பவர்களுக்கு ஜன்னல் இருக்கையில் இருப்பவர்களுடனும்
 ஒரே நொடியில் ஜென்மபகை முளைத்துவிடுகிறது. நொடியில் அந்த குற்ற உணர்ச்சி மறந்து நானும் வசதியாக அமர்ந்து வேடிக்கை பார்க்க துவங்கினேன். இன்றுதான் சம்பள நாள். பெரியாரில் இனிப்புகள் வாங்கிக்கொண்டு அப்படியே பிரியாவுடன் போத்தீஸ் சென்று வந்ததில் இன்று கொஞ்சம் நேரமாகிவிட்டதுதான். ரகங்கள் அவ்வளவாக பிடிக்கவில்லையென்று நாளை ஏ.கே.அஹமத் செல்லலாம் என வந்துவிட்டோம், என்ன இருந்தாலும் நடுத்தர வர்க்க மதுரைவாசிகளுக்கு ஏ.கே.அஹமதுதான்.
பேருந்து வேறு மெதுவாக சென்று கொண்டிருந்தது. நிறுத்தங்கள் செல்ல செல்ல கூட்டம் குறைந்தபோது தீக்கதிர் நிறுத்தத்தில் அவள் ஏறினாள் கையில் குழந்தையுடன். வேண்டாமென நினைத்தபோதும் நான் எண்ணியவாரே அவள் ஒருகணம் தயங்கிவிட்டு என்னருகில்தான் அமர்ந்தாள். என்னதான் முற்போக்காக சிந்திப்பதாக நினைத்தாலும் சில அதிகார சுகங்களுக்கு பழகிப்போன மனம் அதிலிருந்து விடுபட மறுத்தது.  தயக்கம், அவள் அழுக்கு சேலையும் துர்வாடையுமே தவிர வறுமை இல்லை என முட்டு கொடுத்தது. ஆனால் அவளோ அந்த ஸ்மரணை ஏதுமின்றி என்னருகில் தள்ளி அமர்ந்தாள்.
அப்போது தான் அவளை நன்றாக பார்த்தேன். சருகாகிபோன ஒரு ரேஷன் புடவையும், ஒரு பிளாஸ்டிக் தோடும், எப்போதோ வாங்கி இப்போது கறுத்துப்போன ஒரு கவரிங் செயினும், அவளின் ஒட்டிய கழுத்தெலும்பும், வயதிற்கு மீறி அவள் மூக்கருகில் தெரிந்த சுருக்கங்களும் என்னையறியாமல் அல்லது அறிந்து தள்ளி உட்காரவைத்தது.
மேலும் அவள் என்னை பார்த்து சிரித்தபோது சுத்தமாக வெலவெலத்துப்  போனேன்.
நேற்று சித்தி சொன்னது வேறு தேவையில்லாமல் இந்நேரம் என் நினைவிற்கு வந்தது. சுடுகாட்டு பக்கம் யாரோ ஒரு பொம்பளைய காதறுத்து, கழுத்துல கெடக்குற சங்கிலிய அத்துக்கிட்டு போய்ட்டானாம். பஸ்  இப்போது ஏறக்குறைய காலியாகிவிட்டது வேறு வயிற்றில் பீதியை உண்டு பண்ணிற்று. எங்களுடையது இப்போதுதான் வளர்ந்துவரும் ஒரு புறநகர்ப் பகுதி. இரவு எட்டு மணிக்கெல்லாம் ஆள்அரவமற்று போய்விடும். இப்போது அந்த பெண் என் பக்கம் திரும்பி என்னைப் பார்த்து நன்றாகச்  சிரித்து 'செல்லையாநகராப்பா?' என்றாள். நான் என் டம்பப் பையை நன்றாக பிடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டேன்.
என் நிறுத்தம் வந்தது. இறங்கிக் கொண்டு வேகமாக நடந்தேன். நான் எதிர்பார்த்தது போல் அவளும் என்னை பின்தொடர்ந்து வந்தாள். ஒரு பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன வேகமாக நடக்கிறாள். பயத்தில் என்னால் ஒரு நடை கூட இயல்பாக நடக்க முடியவில்லை.
என் பின்னேயே வந்து என் தெருவில் திரும்பியதும் சர்வ நிச்சயமாகிவிட்டது. அம்மா என கத்தாத குறையாக என் வீட்டு வாசலை அடைந்து கிரில் கேட்டைத் திறக்கவும் அவள் வெளியே நின்று 'வசந்திக்கா , வசந்திக்கா' என குரல் கொடுத்தாள். என் அம்மா வெளியே வந்து 'என்ன பஞ்சு, இந்நேரம்' என்றாள். 'ஒன்னுமில்லக்கா, பில்லக்கி மேலுக்கு முடியலன்னு டவுனு ஆஸ்பத்ரிக்கி கூட்டிட்டு போயிடு இப்பதான் வரேன், நம்ம பாப்பா இப்பதான் ஆபீசு முடிஞ்சு வந்துகிருந்துச்சு போல, அதுக்கு என்ன அடையாளம் தெரியல, ரவைல எப்புடி தனியா வரும், அதேன் வீடு வரக்யும் வந்தேன்க்கா, வரட்டுமா பாப்பா' என சொல்லிவிட்டு செல்ல நான் திருதிருவென விழித்துக் கொண்டு நின்றேன்.

Sunday, November 14, 2010

நீ, எனக்கு....

பாட்டி தந்த பருப்பு சாதத்தின்
கடைசி உருண்டை நீ எனக்கு,
மிட்டாய்களை அள்ள
இரு கைகளும் பற்றாமல் கண்களையும் விரிக்கும்
சிறுகுழந்தையை  போல்
உன்னுடன் பேசும் நிமிடங்கள் மட்டும்
நீண்டு கொண்டே
செல்ல வேண்டுமெனக்கு
என் கன்னங்களோடு உன் கன்னங்களை இழைப்பதோ 
எதிர்பாராமல் வந்து
பாதங்களை முட்டும் முயல் குட்டியோ 
தூக்கத்தில் தெரியாமல் விழும்
குழந்தையின் கையோ
ஏதாவதொன்று
எப்போதும் வேண்டுமெனக்கு

Saturday, November 13, 2010

நெறிமாறிகள்

வெறுமையின் அழுத்தத்தில் திமிறி கொண்டிருந்த, என்ன நிறமென்று யூகித்தறிய இயலா சிறிதே வேதனைகளால்  கருமை படர்ந்த,  தனிமையின் அடர்த்தியில் பிசுபிசுத்து போன அறையில் காலண்டரின் பக்கங்கள்  தேடுதல்களின் உச்சத்தில் படபடத்து கொண்டிருந்தது.
காதல் என்பது  ஒரு தேடல் மட்டுமே என்பதை உணராமல் அதை புனிதம் தெய்வீகம் என்பவர்களை நினைத்தால் இப்போதேல்லாம்  சிரிப்பு மட்டுமே எஞ்சுகிறது. அடுத்தது என்ன என்பது மட்டும்தான் காதலோ, ஏற்று கொண்டாலே கிட்டும் வீடுபேற்றில் ஜனிக்கும் காதல் முத்தத்தில் ஆரம்பித்து உச்சத்தின் வீழ்ச்சியில் செத்துவிடுகிறது. பெர்னார்ட் ஷா சொன்னது போல் சொல்லி விட்டாலே காதல் செத்துவிடுகிறதோ?!.  உண்மையை சொன்னால் ஏற்று கொள்ளாத மனம், நீர்க்குமிழியின் நிறபூச்சில் ஏமார்ந்து அதில் முகம் பார்த்து உவகை கொள்கிறது.  வாழ்க்கை அதன் ஷட்ஜமம், மத்திமம், காந்தாரதிலிருந்து நிலை பிரளும்போது கசந்தது.
அந்த ஒரு நொடிதான் வலித்தது.  

Friday, November 12, 2010

ஷங்கருக்கு போட்டியா நானும் கேப்டனும்....

ஹலோ ஏழை, பாழைகளே, எழுத உக்காந்தாச்சு, சீரியசா ஏதாவது எழுதலாம்னு பாத்தா பக்கத்துலையே ஒரு நாதேரி உக்காந்து மொக்க போடுது. சரி ஒரு கவித எழுதலாம்னு பாத்தா, சனியன் அந்த கருமாந்தரம் நமக்கு வருதுஇல்ல. சர்தாண்டான்னு, ஷங்கரோட ரோபோக்கு போட்டியா கேப்டன வச்சு, நம்ம பாய் பிரெண்ட் (இது டீகட பாய்ங்க) தயாரிப்ப்புல ஒரு படமெடுத்துபுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். படம் பேரு விண்ணரசு( பேரரசு, வல்லரசு போக மிச்சமிருக்கிறது ). நவ் லெட் அஸ் வாட்ச் தா ப்ளே, ஓபனிங்ல, நம்ம ஹீரோ பேரு முருகன், எஸ், எஸ், மெக்கானிக் ஷாப்லதான் வேல பாக்குறாரு. அவரு டைட் டீஷர்ட் ல மயங்கி இஷா கோபிகர் கேப்டன வெறித்தனமா காதலிக்கிறாங்க. இஷாவோட அப்பா யாருன்னா நம்ம பாகிஸ்தான் தீவிரவாதிகளோட கையாள். நடு நடுல இஷாவோட காதல் ஆராரோ காதல் ஆராரோனு டூயட் பாடுறாரு (அதுல அந்த ரொமான்ஸ் சீக்வென்ஸ்ல இஷாவோட பேர்பாமன்ஸ்க்கு ஆஸ்காரே குடுக்கலாம்). க்ளைமேக்ஸ்ல பாகிஸ்தான் தீவிரவாதிங்க ப்ளைட்ட ஹய்ஜாக் பண்ணி fault ஆக்கி உட்டுட்டு பாரசூட்ல கீழ குதிசிராங்க்ய. அப்ப நம்ம கேப்டன் மக்கள காப்பாத்துறதுக்காக ப்ளைட்டுக்கு அடில படுத்துகிட்டு பட்டி, டிங்கரிங் வேலையெல்லாம் பாக்குறாரு. இதுக்கு நடுல பாரசூட்ல குதிச்ச நம்ம தீவிரவாதிங்ககூட பேலன்ஸ் பண்ணி தலைகீழா சண்ட போட்டு ஜெயிகிறாரு. ஜெயிச்சு ப்ளைட்ட ஒரு பொட்ட காட்ல லான்ட் பண்றாரு, அந்த எடம் எப்புடி நம்ம இந்திய அரசாங்கத்துக்கு முன்னாடியே  தெரியுமோ, கரெக்டா ஆல் போலிஸ், ஐ ஜி, இஷா, அவுங்க அப்பா, ஆல் பொது மக்கள் அந்த பொட்ட காட்ல கூடிருவாங்க்ய (டேய், இவ்வளவு நேரம் எங்கடா இருந்தீங்க?).  அப்புறம் கேப்டனுக்கு  மெடல், சிபிஐல வேல. சரி சரி இன்னக்கி மொக்க போதும், நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் குடல் கொழம்பு வச்சு சாப்புடுங்க.

Wednesday, November 10, 2010

மழையில் நனைந்த கனவுகளுக்கு காய்ச்சல் வருவதில்லை
வெயிலில் காய்ந்த கனவுகளுக்கு வியர்ப்பதில்லை
பதவி உயர்வு கனவுகள் பர்ஸை நிறைப்பதில்லை
ஆனால் நீ வரும் கனவுகள் மட்டும் ஏன் அன்பே
என் நிஜங்களையும் பாதிக்கிறது.